பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதின் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியூதீனின் கோரிக்கையை சட்டமா அதிபர் திணைக்களம் இன்றையதினம் முற்றாக நிராகரித்துள்ளது.
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதின் மற்றும் அவரது சகோதரரான ரியாஜ் பதியூதீனினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு இன்று வியாழக்கிழமை உச்சநீதிமன்றில் நீதியரசர்களான விஜித் மலல்கொட, மூர்து பெர்ணான்டோ, காமினி அமரசேகர உள்ளிட்டவர்கள் முன்பாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
தங்கள் இருவரையும் அவர்களது சொந்த இல்லங்களில் வீட்டுக்காவலாக வைத்து விசாரணை செய்வதற்கான கோரிக்கை அங்கிய மனுவைத் தாக்கல் செய்திருந்தனர்.
எந்தவொரு அடிப்படைக் காரணத்தை முன்வைக்காமல் கைது செய்யப்பட்டு தடுப்பில் வைக்கப்பட்டிருப்பதானது அநீதியாகும் என்று கூறி தடுப்பிலிருந்து அவர்களை விடுதலை செய்ய உத்தரவிடுமாறு ரிஷாட் பதியூதீன் மற்றும் ரியாஜ் பதியூதீன் ஆகியோர் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.
ரிஷாட் பதியூதின் மற்றும் ரியாஜ் பதியூதீன் சார்பாக நீதிமன்றத்தில் முன்னிலையாகிய சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா நீதிமன்றில் இந்தக் கோரிக்கையை விடுத்திருந்தார்.
எனினும் அவர்களது இந்தக் கோரிக்கையை ஏற்கமுடியாதென சட்டமா அ அதிபர் சார்பாக உச்சநீதிமன்றத்தில் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த இருவரும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தற்போதும் தடுப்பில் வைக்கப்பட்டு விசாரிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் மனு மீதான அடுத்த விசாரணையை இம்மாதம் 28ஆம் திகதி வரை நீதிமன்றம் ஒத்திவைத்தது.
Lanka Newsweek © 2026